அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்

 


மறுமையின் சாட்சிகள்


அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்


சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்


தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள்


ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்


கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி


உடல் உறுப்புகளின் சாட்சி


ஜின்களின் சாட்சி


உயிரற்ற பொருட்களின் சாட்சி


முன்னுரை 


அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!


இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். பூமியில் வாழும்போது செய்த அனைத்துக் காரியங்கள் குறித்தும் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும். அந்த நாளில் அனைத்து அதிகாரமும் ஆதிக்கமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும்.


அப்போது நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். இருப்பினும், அவன் தமது மனம்போன போக்கில் விசாரித்து கூலி வழங்கமாட்டான். அவன் நீதமானவன். அவன் நமது செயல்களுக்கும் சில விதிமுறைகளை வழிமுறைகளை வைத்திருக்கிறான். அந்த வகையில், அவனது அனைத்து விசாரணைகளும் அதற்குரிய கூலிகளும் ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். எவரும் எந்தவொரு செயலையும் எந்த வகையிலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.


நன்மையான காரியங்களைச் செய்திருக்கும் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குரிய பரிசுகளை, வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். தீமையான காரியங்களைச் செய்திருக்கும் குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனைகளை, வேதனைகளைப் பெற்றுக்கொள்வார்கள். சின்னஞ்சிறிய அற்பமான செயல்களாக இருந்தாலும், மிகப்பெரிய மகத்தான காரியங்களாக இருந்தாலும் அனைத்துக்கும் அந்நாளில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கும். பல்வேறு விதமான சான்றுகள் இருக்கும்.


இவ்வாறு, நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


 وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍؕ‏


சாட்சி கூறுவோர் மீதும் சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 85:3)


 وَنُفِخَ فِى الصُّوْرِ ‌ؕ ذٰ لِكَ يَوْمُ الْوَعِيْدِ‏ – وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآٮِٕقٌ وَّشَهِيْدٌ‏


ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர். 


(அல்குர்ஆன்: 50:20,21)


 وَيَوْمَ نَـبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِيْنَ كَفَرُوْا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏


ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (வணக்க வழிபாடுகள் செய்யுமாறு) வற்புறுத்தப்படமாட்டார்கள்.   


(அல்குர்ஆன்: 16:84)


 اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ ۙ‏


நமது தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் முன் வரும் நாளிலும் நாம் உதவுவோம். 


(அல்குர்ஆன்: 40:51)


وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَـقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ


ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!” என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும். 


(அல்குர்ஆன்: 28:75)


 وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِآىْ َٔ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏


பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


(அல்குர்ஆன்: 39:69)


எந்தவொரு நல்லறமும் செய்யாதவருக்கு, சொர்க்கம் தரப்படுகிறது என்று அதிருப்தியில்  எவரும் எதிர்த்துப் பேசுவதற்கோ வாதம் செய்வதற்கோ வாய்ப்பே இருக்காது. எந்தவொருதீமையும் செய்யாதவருக்கு நரகம் கொடுக்கப்படுகிறது என்று பொய் சொல்லி உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. காரணம், நன்மைகள் தீமைகள் அனைத்துக்கும் மிகத் துல்லியமான சாட்சிகள் இருக்கும்.


இந்த உலகில் வாழும்போது, நமக்குத் தெரியும் வகையிலும் தெரியாத வகையிலும் பல சாட்சிகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த வகையில், மறுமையில் எவ்வாறெல்லாம் சாட்சிகள் சூழ்ந்திருக்கும் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் இந்த உரையில் அறிந்து கொள்வோம்.


அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்


நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிந்தவன். உறக்கம், ஓய்வு போன்ற பலவீனம் இல்லாமல் இரவு பகல் முழுவதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருப்பவன். மனிதர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக துல்லியமாக அறிந்தவன். இத்தகைய இறைவன் மறுமை நாளில் நமது செயல்களுக்கு முதல் சாட்சியாக இருப்பான்.


நாம் நல்லது செய்தோமா? கெட்டது செய்தோமா? என்று பகிரங்கப்படுத்துவதற்கு அவனே போதுமானவன். இதை நாம்  நமது மனதில் முதலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை குர்ஆனிலும் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அந்த ஆதாரங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.


 


 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ؕ قُلْ اِنِ افْتَـرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِىْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِيْضُوْنَ فِيْهِ‌ؕ كَفٰى بِهٖ شَهِيْدًاۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ


 


“இவர் இதை இட்டுக்கட்டிவிட்டார்” என்று கூறுகிறார்களா? “நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! 


(அல்குர்ஆன்: 46:8)


 


 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا‌ ؕ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ‏


 


முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்” என்று, மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்” என்று கூறுவீராக! 


(அல்குர்ஆன்: 13:43)


 


 وَاِمَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ‏


 


(முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான். 


(அல்குர்ஆன்: 10:46)


 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ‌ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ‌ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ‏


 فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنَـنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْنَ‏


அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள். 


(அல்குர்ஆன்: 10:28,29)


 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏


“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் “தூதர்‘ உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான். 


(அல்குர்ஆன்: 3:81)


நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள்.


நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள்.


அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம்.


பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர்.


பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்!” எனக் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),

ஆதாரம்: புகாரி-1741 , 4403


Comments

Popular posts from this blog

தவறான புரிதல்கள்

நல்ல நண்பன் – கெட்ட நண்பன்

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!